பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சேலம், கன்னியாகுமரி மற்றும் கோவையில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டார். கோவையில் கடந்த திங்களன்று பாஜக சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த ரோடு ஷோவில் அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையில் இதில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக பரப்புரையில் பள்ளி மாணவர்களை பாஜக பயன்படுத்தியதாக, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்விற்கு பள்ளி குழந்தைகளை அழைந்து வந்த அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு, கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில், "தேர்தல் பரப்புரை போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி, மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரியவந்துள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அரசியல் கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்விற்கு அழைத்து சென்றதாக பள்ளி நிர்வாகத்தின் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி செவ்வாயன்று பள்ளியில் ஆய்வு செய்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.