தருமபுரி, ஜூலை 17- ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி ஆட்சியர் அலுவலகத் தில் பொதுமக்கள் நூதன முறையில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்டது தோக்கம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டு நிலத்தினை அப்பகுதி பொதுமக்கள் காலம் காலமாக பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில், அப்பகுதி அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் மகாலிங்கம் என்பவர், இந்த நிலத்தை வாங்கி விட்டேன் எனக்கூறி, அவ்விடத்தில் தென்னை கன்றுகள் நாட்டுள்ளார். மேலும், அந்த இடத்தில் கம்பிவேலி அமைத் துள்ளார். ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா? என பொதுமக்கள், அவரிடம் முறையிட்டபோது, “யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளிலேயே புதைத்து கொள்ளுங்கள்; இங்கே வரக்கூடாது” என மிரட்டல் விடுத்து வருகிறார். சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். முன்னதாக, அப்பகுதி பொதுமக்கள், பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.