சேலம், ஏப்.2- சேலத்தில் வெயில் தொடர்ந்து 11 ஆவது நாளாக 100 டிகிரிக்கு பதிவாகியுள்ள நிலையில், பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக சேலத்தில் 103 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பகலில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறாா்கள். குறிப்பாக, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பழக்கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனர். கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலைச் சமாளிக்கும் வகையில் தங்களது சுடிதார் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், நடந்து செல்லும் பெண்கள் குடையை பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது. சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் இளநீர், நுங்கு, பதநீா், தா்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு. மோர், கம்மங்கூழ் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனர். வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்த வரை பொதுமக்கள் தவிர்க்குமாறும், ஜூஸ், இளநீர், மோர், கரும்புச்சாறு போன்ற நீர் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.