districts

img

வார்டு மறுவரையறை கேட்டு மக்கள் சாலைமறியல்

நாமக்கல், பிப்.3- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வார்டு மறுவரையறை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வார்டுகளிலும் மறுவரையறை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சியின் 3 ஆவது வார்டு பகுதியில் உள்ள கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியில் இருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்குகளை ஒழுகூர்பட்டி 2 ஆவது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஒழுகூர் பட்டி, குப்புசிபாளையம், கோவில் காடு மற்றும் ராஜாநகர் பகுதிக்கு இடையே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் ஒழுகூர்பட்டிக்கு அருகில் உள்ள பகுதியை அந்த வார்டுடன் இணைக்கக்கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், மறுசீரமைப்பு முடிவுகளில் எவ்வித மாற்றமும் செய்யாத நிலையில், தற்போது பேரூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இதையடுத்து, கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்   தங்களுக்கு மிக அருகில் உள்ள 5 ஆவது வார்டுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பரமத்திவேலூர் - மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.