districts

img

மேட்டுப்பாளையம்: கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

குட்டை நீரில் பதுங்கியபடி கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள முதலை பிடிப்பட்டது..இரண்டுநாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பிடித்தனர்.

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டைக்குள் முதலை ஒன்று இருப்பது உள்ளூர் மக்கள் கண்டனர்.

பட்டக்காரனூர் கிராமத்தின் தடுப்பணை வழியாக பவானி ஆற்றினை சென்றடையும் இந்த குட்டையில் அண்மையில் பெய்த கன மழையால் தற்போது வரை இந்த குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதில் பெரிய முதலையொன்று அவ்வப்போது வெளியில் வருவதும் மீண்டும் குட்டைக்குள் சென்று மறைவதுமாக இருப்பதை கண்ட கிராம மக்கள் அச்சத்துடன் இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

குடியிருப்புகள் அருகே அமைந்துள்ள இந்த குட்டையில் கால்நடைகள் தண்ணீர் அருந்துவதாலும் உள்ளூர் மக்கள் சிலர் குட்டை நீரில் மீன் பிடிப்பது குளிப்பது என்பது வழக்கம் என்பதால் வனத்துறை விரைந்து முதலையை பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர்..

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காலை முதல் குட்டைக்குள் பதுங்கி இருந்த முதலையை பிடிக்கும் பணியை துவங்கினர்..

முதலை உள்ள குட்டையை சுற்றி நைலான் வலையை கட்டிய வனத்துறையினர்  இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர்.குட்டையில் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் நேற்று காலை துவங்கிய பணி இன்று மதியம் தான் முடிந்து குட்டையில் நீர் குறைந்து முதலை வெளியே தெரிய வந்தது..

இதனையடுத்து முதலையின் கழுத்து மற்றும் வாய் பகுதியை சுருக்கு கயிற்றால் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது..பல முறை இதில் இருந்து தப்பிய முதலை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இறுதியில் வனத்துறையினரின் கயிற்றில் சிக்கியது.

கயிற்றில் இருந்து தப்பிக்க முதலை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் இறுதியில் முற்றிலுமாக கயிற்றால் கட்டப்பட்ட முதலை வனத்துறையினரால் குட்டையில் இருந்து தூக்கி செல்லப்பட்டு வனத்துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது..

கால்நடை மருத்துவரின் ஆய்விற்கு பின்னர் பிடிபட்ட முதலை பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் விடுவிக்கப்பட உள்ளது.