சேலம், ஜூலை 18- இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு எடப்பாடி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பல்வேறு வகையான தரிசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும். நீர் பிடிப்பு பகுதிகளில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்து பட்டா வங்க வேண்டும்; அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் இடைக்குழு உறுப்பினர்கள் டி.மூர்த்தி, வி.பி.தங்கவேல் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சேகர், ஜி.கணபதி, இடைக்குழு செயலாளர்கள் மு.பெரியண்ணன், எஸ்.முத்துசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக எடப்பாடி மண்டல துணை வட்டாசியரிடம் சிபிஎம் தலைவர்கள் மனுக்களை அளித்தனர்.