நீர் நிலை பாதுகாப்பு பேரணி
தஞ்சாவூர் ஜூலை13- தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு மற்றும் பேராவூரணி கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைபா) சார்பில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி வலசக்காடு முதல் ஒட்டங்காடு வரை சுமார் 5 கிமீ தூரத்துக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான, திருநெல்வேலி உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் பேரணியைத் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பேராவூரணி பெரியகுளத்தை தூர்வாரும் பணி மேற்கொண்டு வரும் கைபா நிர்வாகிகள் ராம்குமார், பிரபாகரன், நிமல் ராகவன் மற்றும் ஒட்டங்காடு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், கிராமத்தினர், விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒட்டங்காடு பெரியகுளத்தை, அரசுத்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் வரும் ஜூலை 21 முதல் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. ஒட்டங்காடு பெரியகுளத்தை தூர்வாரும் பணிக்கு உதவ விரும்புவோர் நேருதாசன்- 98654-01001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க கோரிக்கை
புதுக்கோட்டை ஜூலை.13- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக்கிளை கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் ஆழ்வாரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். வட்டச்செயலாளர் கருப்பையா, பொருளாளர் ரெங்கசாமி அறிக்கை சமர்ப்பித்தனர்.கூட்டத்தில், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.