districts

img

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.14- மகளிர் உரிமைத் தொகையை விரிவுபடுத்தும் விதத்தில் முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். விவசாயத்தை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், வீடு இல்லாதவர்களுக்கும் வீடு கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் கோரிக்கை மாநாடு திங்களன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் நகரச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவு செய்து பேசினார். அனைவருக்கும் வீடு அவசியம் அப்போது, “நாடு முழுவதும் ஏழை-எளிய மக்கள் பெரும்பாலானோர் தாங்கள் வசிப்பதற்கு சொந்தமாக ஒரு இடம் இல்லாத துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் , வேலை ஆகியவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.  

அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு என்பது உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தியே மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டக் களங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அதானி ஊழல் “ஒன்றிய மோடி அரசு இத்தகைய ஏழை-எளிய, நடுத்தர மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு மாறாக, தங்களது கூட்டுக் களவாணிகளான அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகை உட்பட அனைத்தையும் வாரி வழங்குகிறது. அதானியின் முறைகேடுகளை, மோசடிகளை ஹிண்டர்பர்க் நிறுவனம் மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் பங்குச் சந்தையில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், இதனால் பொதுமக்களின் பல்வேறு வகையான சேமிப்புகள் உட்பட பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பங்குச் சந்தையை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட செபி என்ற அமைப்பின் தலைவரையே அதானி விலைக்கு வாங்கி இருக்கிறார் என்பதுதான் இப்போது வெளிவந்துள்ள மிகப்பெரும் ஊழல் முறைகேடு. எனவே, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் அனுமதி மறுக்கிறார். ஏனென்றால், நாடாளுமன்ற விசாரணை என்று வந்தால், பிரதமர் மோடியும் அந்த விசாரணை வளையத்தில் வந்து விடுவார் என்ற அச்சமே காரணம்” என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பரில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் நபர்கள் உள்ள வீட்டில் வசிக்கும் பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; ஏராளமான குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் கைத்தறி தொழிலைப் பாதுகாக்கவும், பஞ்சாலைத் தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி உள்ளிட்டோர்  தீர்மானங்களை முன்மொழிந்தனர்.  கட்சியின் நகர் குழு உறுப்பினர் பிரபு, வட்டாரக்குழு உறுப்பி னர்கள் சந்தனம், பெருமாள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். நிறைவாக பிச்சைக்கனி நன்றி கூறினார். மாநாட்டில் கட்சி நகர்குழு உறுப்பினர்கள், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, புயல் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மரிய டேவிட் ஒருங்கிணைத்தார்.