பொள்ளாச்சி, டிச.25- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில், இரண்டாம் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், ரமணமுதலிபுதூர், மயிலாடுதுறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக, சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களில் இரண்டு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியாரிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், கடந்த ஜூலை மாதம் துவக்கத்தில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. அவை நல்ல விளைச்சலடைந்ததுடன், கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் அறுவடை பணி துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை பணி நடந்து முடிந்தது. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தற்போதும், அவ்வப்போது தொடர்வதால், இரண்டாம் போக சாகுபடிக்காக இம்மாத துவக்கத்தில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழவு செய்து, அதில் நாற்றாங்கால் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாற்றாங்காலில் வளர்ந்த நாற்றுகளை பறித்து, வயல்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நடவு செய்யப்படும் நெல் நாற்று, இன்றும் 4 மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.