உடுமலை, ஜன.4- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே பிறந்த தின விழா உடுமலை மாதிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மராட்டிய மாநி லத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் சாவித்ரிபாய் பூலே பிறந்தார். நாட்டின் முதல் பெண்ணிய சின்னமாக கருதப்படும் சாவித்ரிபாய் பூலே என்பவர் தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். சாவித்ரிபாய் பூலேவிற்கு அவரது 9 வயதில், 13 வயதான ஜோதிராவ் பூலேவை 1840ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். ஜோதிராவ் பூலே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ். சாவித்ரிக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். சாவித்ரிபாய் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டி ருந்ததால், பின் அகமது நகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து புனேவில் மற்றொரு ஆசிரியரின் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று படித்தார்.
பின் மகர்வாடாவில் ஒரு புரட்சிகர பெண்ணியலாளரும், தன் கணவரது வழிகாட்டியான சகுனாபாயுடன் சேர்ந்து சிறுமிகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார். சில நாட்களில் சாவித்ரிபாய், ஜோதிராவ் மற்றும் சகுனாபாய் ஆகியோர் இந்தியாவில் சிறுமிகளுக்கான முதல் பள்ளியை தொடங் கினர். 1848ம் ஆண்டில் துவக்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியராக பொறுப்பேற்ற சாவித்ரிபாய், சிறுமிகள் படிப்பை தொடர ஊக்கத் தொகையும் வழங்கினர். மேலும் இதுபோன்றே சிறுமி களுக்காக மேலும் 18 பள்ளிகளையும் அடுத்தடுத்து தொடங் கினர். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையின் பிறந்தநாள் கொண்டாட்டம் உடுமலை நூலக வாசகர் மன்றத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் க.லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா வரவேற்றார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் எஸ்.சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். சாவித்ரிபாய் உருவ படத்திற்கு நூலக வாசகர் வட்டம் மற்றும் வாசகர்கள் சார்பில் மரியாதை செலுத்தபட்டது. இதில் வாசகர் வட்ட நிர்வாகிகள் சி.மணி, ஆர்.எஸ்.மணி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கே. விஜயகுமார் நன்றி கூறினார்.