districts

அரசியல் ஆதாயத்திற்காக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பாஜக

திருப்பூர், டிச. 8- சந்தர்ப்பவாத, குறுகிய அரசியலுக்காக மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பாஜகவின் நடவடிக்கைக்கு இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கனேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பகுதிகளில் எடுக்கப்படும் குப்பைகளை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சில தனியார்களுடைய கிணற்றில் அவர்களின் அனுமதியோடு கொட்டப்பட்டு வந்தது. அந்த கிணறுகள் எல்லாம் நிரம்பியவுடன் மீண்டும் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டது. அதை ஒட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக கடந்த 01/03/2021 அன்று இடுவாய் ஊராட்சியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்கப்பட்டது.  குப்பைகள் எடுக்கப்படாமல் இருந்தால் மிகப்பெரிய சுகாதாரக் கேடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். எனவே, தற்காலிகமாக இடுவாயில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம்  இல்லாத ஊரின் கிழக்கு  பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலி  இடத்தை பயன்படுத்துவது. மேலும், குப்பையை மறுசுழற்சி செய்ய அரசின் அனுமதியோடு காட்டின்  ஓரத்தில் ஒரு பகுதியில் கொட்டுவது என  அதிமுக, திமுக, மதிமுக, சிபிஐஎம், சிபிஐ, மக்கள் நீதி மையம், கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. இதனையேற்று கூட்டத்தில் பங்கேற்ற பாஜக உள்ளிட்ட கட்சியினர் அத்தீர்மானத்தில் கையெழுத்துட்டனர்.

இந்த முடிவின் அடிப்படையில் அரசுக்கு சொந்தமான அறநிலையத்துறை காட்டின் ஒரு ஓரத்தில் ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டில் குப்பைகளை கொட்டலாம் என ஆதரவு தெரிவித்து கையெழுத்தும் போட்டு, ஏற்றுக் கொண்ட பாஜகவும், கட்சி சார்பற்ற விவசாய சங்கமும், தற்போது, தனிநபர் சிலருடன் சேர்ந்து குறுகிய அரசியல் நோக்கத்தோடு திடீரென இது நாள்  வரை கொட்டப்பட்டு வந்த காட்டில் அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் இல்லாத சூழலில் தான் அங்கு கொட்டப்பட்டு வருகிறது எனவும், மாற்று இடம் ஏதாவது இருந்தால் நீங்கள் சொல்லலாம் என அவர்களிடம் தெரிவித்த பொழுது, குப்பையை நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என அதன் ஒரு பகுதியில் கம்பி வேலி அமைத்து தடுக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். இடுவாய் ஊராட்சியின் அனைத்து ஊர்களையும் சேர்ந்த முக்கியஸ்தர்களை கொண்ட மாரியம்மன் கோவிலில் நடந்த கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசும் பொழுது அவர்களின் ஆலோசனைப்படி அந்தக் காட்டின்  குறுகிய பகுதியை மட்டும் கம்பி வேலி அமைத்து அதில் மட்டும் குப்பைகளை கொட்டலாம் என அவர்கள் சொன்ன ஆலோசனையையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதை அவர்களிடம் விளக்கிச் சொன்ன போதும், ஏற்றுக் கொள்ளாமல் பொது மக்களுக்கு என்னவானால், எங்களுக்கு என்ன என்று குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். அவர்கள் கட்சியின் மாநில தலைவரை அழைத்து வந்து அந்தப் பிரச்சனையில் இடுவாய் ஊராட்சி நிர்வாகம் ஏதோ சர்வாதிகார அடிப்படையில் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்குகிறார்கள். ஊராட்சியின் நலன் விரும்புபவர்கள் சொல்லும் எந்த ஆலோசனையையும் திறந்த  மனதோடு ஏற்றுக் கொள்ள ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், குறுகிய அரசியல் நலனில் செயல்படும் பாஜகவும், அதற்குத் துணை போகும் சில நபர்களும் இடுவாய் ஊராட்சியில் சுகாதார கேடு ஏற்பட வேண்டும் என்ற  நிலைக்கு ஊராட்சி நிர்வாகத்தை தள்ளுவதற்கு உண்டான வேலைகளை செய்ய முற்பட்டு உள்ளார்கள். பாஜகவினர் தாங்கள் ஏற்றுக் கொண்ட முடிவை தாங்களே மீறி நடக்கக்கூடிய விந்தையை இங்குதான் பார்க்க வேண்டியுள்ளது.  இவர்களின் குறுகிய சந்தர்ப்பவாத அரசியல் செயல்பாடுகள் ஊராட்சி மக்களின் துணையோடு முறியடிக்கப்படும். மேலும், மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.