நாமக்கல், ஜூலை 13- நாமக்கல், மாவரங் காடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வெளிச்சமின்றி நோயாளிகள் இருட்டில் தவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், மாவரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் புற நோயாளிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக தொழிலாளர்கள் அடிக்கடி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு, பிரசவ வார்டு திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகப் பகுதியில் உள்ள மின்விளக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர். முக்கியமாக நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அமறும் பகுதி முழுவதும் வெளிச்சமின்றி உள்ளது. விஷ ஜந்துக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றி நோயாளிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.