சிஐடியு கோரிக்கை திருப்பூர், அக்.19- திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு 8.33 சதவிகிதம் என்ற சட்டப்படி குறைந்தபட்ச போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் கோரியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி துறையில், தனியார் துறையிலும், கூட்டுறவுத் துறையிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி துணியை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுத் துறையில் 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய ஓய்வூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. கைத்தறி துறை துணை உதவி இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கைத்தறி தொழிலை நம்பி இருக்கக்கூடிய கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் என்பது இன்றுவரை வழங்கப்படவில்லை. வரக்கூடிய 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெற்ற கூலியிலிருந்து 8.33 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள், கைத்தறி நெசவாளர் சங்கத்தோடு பேசி முடிவெடுக்க வேண்டும். இதற்கு கைத்தறி துணி நூல் உதவி இயக்குநர் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவுத் துறையில் போனஸ் என்பது இன்னமும் வழங்கப்படாமல் இருக்கிறது. போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், போனஸ் வழங்க மறுக்கும் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு எதிராக நெசவாளர்கள் போராட முன்வர வேண்டும் என்றும் சிஐடியு சார்பில் கேட்டுக்கொள்வதாக என்.கனகராஜ் கூறியுள்ளார்.