கோவை, மே 20- தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை துடியலூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய அரசு ஊழியர்களுக்கு முறையான விடுப்புகள் வழங்காமல், துணை இயக்குநர் ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவது, பணியாற்றுகிற ஊழியர்களிடத்தில் வசூல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார். மேலும், அடிப்படை ஊழியரான ரவி என்பவரை பழிவாங்கும் வகையில் விடுப்புகள் முறைப்படுத்தாமல், ஊதிய பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, 12 பயிற்றுநர்கள் மீது குற்ற குறிப்பாணைகளை வழங்கி பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். துணை இயக்குநரின் ஊழியர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துடியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.எஸ்.பால்ராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.