நாமக்கல், ஜன.13- உயிருக்கு பயந்து திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள மல்லசமுத்திரம், 1 ஆவது வார்டு திமுக ஒன்றியக் கவுன்சிலராக தமிழ்ச்செல்வி உள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்செல்வியின் கணவர் முருகேசன். இவர் மற்றும் அவரது நண்பர் கிளாபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (உயர் வகுப்பு) இருவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் டெண்டர் எடுத்து டேங்கர் லாரிகளை தனியார் நிதி நிறுவனம் மூலம் வாங்கி இணைந்து கூட்டுத் தொழில் செய்து வந்துள்ளனர். நாளடைவில் முருகேசனுக்கு சுரேஷின் மோசடி செயல் தெரியவர, தொழில் நிமித்தமான கணக்கு கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் பிரச்சனை ஏற்படவே, முருகேசனிடம் பெற்ற செக் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராமத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுரேஷ் சம்மதிக்கவில்லை. இதனையடுத்து, சுரேஷ் சொத்தை அபகரித்து விட்டார் என முருகேசன் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களில் முருகேசனை தீர்த்து கட்டி விடுவேன் என்று சுரேஷ் கொலை மிரட்டல் விட்டதாக கூறி ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் முருகேசன் தஞ்சம் அடைந்தனர். சுரேஷ் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி, திமுகவை சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். நாமக்கல்லில் திமுகவை சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.