districts

img

சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்திற்கான சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த்ததை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 23வது மாநாடு கோவை மருதமலை அடிவாரத்திலுள்ள பொதிகை மஹாலில் ஞாயிறன்று துவங்கியது. முன்னதாக ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ஜோதி, சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி மற்றும் கணபதியில் இருந்து கொடி பயணம் ஆகியவை மாநாட்டு அரங்குக்கு கொண்டுவரப்பட்டு தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தோழர் யு.கே. வெள்ளிங்கிரி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். ராஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் வி.மணி வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலி தீர்மானத்தை கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன் முன்வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வேலை அறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கையை முன்வைத்தார். செயற்குழு உறுப்பினர் என். ஜெயபாலன் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக தொண்டாமுத்தூர் பகுதியில் ஆரம்ப காலத்திலிருந்து கட்சிப் பணியாற்றிய மூத்த தோழர்கள் தலைவர்களால கௌரவிக்கப்பட்டனர்.

 முதல் நாள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த அதிமுக அரசு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் கடந்த அதிமுக அரசு மற்றும் உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என உறுதியாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக உள்ளிட்ட கட்சியினர் சூயஸ் உடனான ஒப்பந்தத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உடனடியாக கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்துகிறது.

இதேபோன்று ஒன்றிய அரசு சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக தொடர்ந்து மூலப் பொருள்களின் விலைகளை உயர்த்தி வருகிறது.இதனால் நாடு முழுவதும் உள்ள சிறு குறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு இந்த கொரோனா காலத்தில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிற சிறு குறு தொழில்களுக்கான கடன் வட்டியை தள்ளுபடி செய்வதோடு, கடன் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை நீட்டித்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் கோவை மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மதவெறி அமைப்புகள் தொடர்ச்சியாக பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

 இது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகவே இந்த மதவெறி அமைப்புகளை மக்கள் தனிமைப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் காவல்துறை நிர்வாகம் ஆகியவைகள் கல்வி நிலைய கூடங்களில் மதவெறி அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று மாநாடு வலியுறுத்துகிறது. 

இதேபோல தொடர்ந்து பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கோவையில் அதிகரித்து வருகிறது. மாநாடு கவலையோடு பார்க்கிறது. இவ்விகாரத்தில் மாவட்ட நிர்வாகம் பணியிடங்கள் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் புகார் கமிட்டி அமைத்திருப்பதை உறுதி செய்வதோடு தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகள் வழக்கில் இருந்து தப்பிச் செல்லாமல் இருக்க போதிய ஆதாரங்களை திரட்டி உரிய தண்டனையை பெற்றுத் தருவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது.