கோயம்புத்தூர், ஏப். 13 - கோவை மாவட்டம், சிட்டி பாளையத்தில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமி, கரூர் காங்கிரஸ் வேட்பா ளர் ஜோதிமணி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு:
காங்கிரசின் அறிக்கையே தேர்தலின் கதாநாயகன்
சகோதரர் ராகுல் அவர்களின் நடைபயணத்தை, நான்தான் கன்னியா குமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். “மக்களிடம் செல்! மக்களிடம் இருந்து கற்றுக்கொள்!” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், சகோதரர் ராகுல், தன்னுடைய நடைபயணத்தில் மக்களு டன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “தேர்தலின் கதாநாயகன்” காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான்.
நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகள்
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்; பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு; நீட் தேர்வு விலக்கு; நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு; ஒன்றிய அரசின் 50 விழுக்காடு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை உயர்த்த, சட்டத் திருத்தம்; எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உத வித்தொகை இரண்டு மடங்கு; வேலை வாய்ப்பில் அவர்களுக்கான காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவாதம்; முக்கியமாக, இந்தக் கோவை – திருப்பூர் மண்டலத்தைக் கடுமையாக பாதித்திருக்கும் ஜி.எஸ்.டி. சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம்; வேளாண் இடுபொருட் களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது; விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்! - இப்படி மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார்.
இது எனது சாதனை என்று மோடியால் கூற முடியாதது ஏன்?
இதையெல்லாம் இந்தியா கூட்டணி ஆட்சியில் வலியுறுத்தி நிறைவேற்றி, “தி.மு.க. சொன்னதைச் செய்யும்” என்று மீண்டும் நிரூபிப்போம்!
இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால், பிரதமர் மோடி அவர்கள்! எப்போதும் வெளிநாட்டு சுற்றுப்பய ணத்தில் இருக்கிறவர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்று உள்நாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். கூட்டங்களில் பேசுகிறாரே! அதில் எங்கேயாவது தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்று எதையாவது பேசுகிறாரா? இல்லை!
பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும், சாதனைகள் என்று தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறுசெய்கிறார்.
பாஜகவுக்கு ஆதாயம் தேடித்தரவே அதிமுக தனியாக பிரிந்து போட்டி
அவர் ஒருபுறம் என்றால், மற்றொரு பக்கம், பத்தாண்டுகள் தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிசாமி! நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்!
ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரி யாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லா மல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!
தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனி சாமி, பாஜகவின் கூட்டணி முறிந்து விட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பாஜகவை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார்! இப்படிப்பட்டவர்களைப் பற்றி, நாங்கள் என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்”.
கோவையின் தொழிற்துறையை நாசமாக்கிய மோடி ஆட்சி
தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பாஜக பல வகைகளிலும் நாசமாக்கி இருக்கிறது.
பாஜக ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது! கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது! இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து,இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள்! பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்!
அதுமட்டுமல்ல வங்கதேசம் கூட பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது! இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
கோவைக்கு வந்த 6,500 கோடி முதலீடு குஜராத்திற்கு மாற்றம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது.
தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றி விட்டார்கள்! இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம்! எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்! ஆனால், எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது!
இந்தியாவைக் காப்போம்; தமிழ்நாட்டைக் காப்போம்!
எனவே, தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19 அன்று உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்!
பாஜககூட்டணியையும், பாஜகவின் ‘பி’ டீமான அ.தி.மு.க. கூட்டணியையும் ஒரு சேர வீழ்த்தவேண்டும்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.