கோவை, மார்ச் 14- தந்தை கடன் வாங்கிவிட்டு இறந்த நிலையில், நிதி நிறுவனத்தினர் தன்னை துன்புறுத்துவதாக கல்லூரி மாணவி ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கிணறு வெட்டும் வேலை செய்து வந்த இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை தங்கராஜ் மற்றும் அவரது தாய் குஞ்சம்மாள் ஆகியோர் செலுத்தி வந்த நிலையில், திடிரென குஞ்சம்மாள் மற்றும் தங்கராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அவரது மகளும், கல்லூரி மாணவியுமான ராம்பிரபா பகுதி நேர வேலைக்கு சென்று கடனை சிறுக சிறுக திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இருப்பினும் கல்லூரியில் படிப்பதால், தன்னால் விரைவாக பணத்தை செலுத்த முடியவில்லை எனவும், கடனை திருப்பி செலுத்த, கால அவகாசம் வேண்டும் தர வேண்டும் என்றும் நிதி நிறுவனத்தாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தினர் மாணவியையும், பள்ளியில் படிக்கும் சகோதரிகளையும், அவரது தாயையும் மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசுவவதாக ராம்பிரபா கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து ராம்பிரபா கூறுகையில், கோவையில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாங்கிய கடனுக்காக எனது தந்தையும், பாட்டியும் இறந்த பிறகு பகுதி நேர வேலைக்கு சென்று ரூ.23 ஆயிரம் செலுத்தினேன். ஆனாலும், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டுகின்றனர். தகாத முறையில் பேசுகின்றனர், இதனால் நான் தற்கொலைக்கும் முயன்றுவிட்டேன். ரூ.3 லட்சம் கடன் வாங்கியதற்கு, ரூ.6 லட்சம் கேட்கின்றனர். இல்லையென்றால் வீட்டை பூட்டி சீல் வைப்போம் என்று, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.