கோவையில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் இம்மாதம் 13ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையிலான 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகம் சென்றனர்.
அங்கு, மாநகராட்சி வருவாய்த்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினத்திடம் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுருத்தி மனுக்களை அளித்தனர்.
இதில், கோவை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, பூபதி, கண்ணகி, சுமதி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.