கோவை மாநகரின் பிரதான பகுதிகளில் கட்டப்பட்ட சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலங்கள் சனியன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் முதல்வர் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி, பி.ஆர்.நடராஜன் எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கொடியசைத்து மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோவையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், ரூ.60 கோடி மதிப்பீட்டில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர்கல்பனாஆனந்தகுமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், வானதி ஸ்ரீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் எம்.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி சாலை சுங்கம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. உக்கடம் செல்லும் சாலையில் கூடுதல் இறங்குதளத்தோடு இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டப்பட்டுள்ளன.
சுங்கம் மேம்பாலத்தின் மூலம், இராமநாதபுரம், ஓலம்பஸ், சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகளும், சவுரிபாளையம் பிரிவு, புளியகுளம் பிரிவு, ரேஸ்கோர்ஸ் சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதோடு, காலவிரயம் தவிர்க்கப்படும். சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும்.
கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும் இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பயன்பெறுவர்கள்.
முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழக முதல்வர் இந்த பாலத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த பாலமானது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. முதலமைச்சர் திருக்கரங்களால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக இது போன்ற பாலங்கள் மற்றும் சாலைகள் அனைத்தும் கடந்த 2021ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைத்திருக்க வேண்டும். இருந்தபோதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் உடனடியாக அதை சரி செய்து தற்போது பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இதுபோன்ற என்னற்ற வளர்ச்சி திட்டங்களை கோவை மாவட்டத்தில் நிறைவேற்ற தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார்.