தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 27 அன்று காலை கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக் கூட்டத்திற்கு கடலூர் வருகை புரிந்தார். அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் பத்து பக்கத்துக்கு மேலாக விளம்பரங்கள். நிரந்தர முதல்வரே, காவேரி பாதுகாவலன், விவசாயிகளின் தோழன், குடிமராமத்து நாயகன், விவசாயிகளின் விடிவெள்ளி என பல பெயர்களில் வரவேற்பு விளம்பரங்கள் அளிக்கப் பட்டன. புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்குவதற்கு புதிய மேடை, அதற்காக சுற்றும் முற்றும் உள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு புதிய அறைகள் புதிய நாற்காலி மேஜை கள் என கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவு செய்து ஆடம்பரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி ஏமாற்று அறிவிப்பா? ரூ.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரூ. 32 கோடியில் புதிய திட்டங்களுக் கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் வளர்ச்சி திட்ட பணி ஆய்வு கூட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு முறையாக அழைக்கப்படவில்லை. 26 ஆம் தேதி மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் போன் மூலம் சட்டமன்ற உறுப்பினர் களை தொடர்புகொண்டு அழைத்ததாக கூறியுள்ளார் இதற்கு மேல் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தபின் தான் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். இது சாத்தியமில்லை. திட்டமிட்டு தவிர்ப்பதற்கான ஏற்பாடாகத்தான் உள்ளது.
முதல்வர் வளர்ச்சித் திட்ட ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், பயனாளிகள் பத்திரிகையாளர், அனைவருக்கும் முன்கூட்டி கொரோனாபரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி துவங்கிய பிறகும் கூட பலருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை. பத்திரிகையாளர் ஒருவருக்கு பாஸ்டிவ் எனத்தெரிந்து கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் பத்திரிகையாளர் மத்தியில் பீதி ஏற்பட்டது. தமிழக முதல்வர் ஆய்வு கூட்டத்துக்கு வருவதால் கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிப்பாக வரு மென மக்கள் எதிர்பார்த்தார்கள். கடலூரில் பத்தாண்டு களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான அறிவிப்பு வரும் என எதிர் பார்த்த நிலையில் சிதம்பரம் ராஜா சர் முத்தையா மெடிக்கல் கல்லூரி இருக்கும்போது மத்திய அரசு அனு மதி தரவில்லை என முதல்வர் விளக்கம் அளித்தார். மத்திய அரசிடம் கேட்காமல் 2010ஆம் ஆண்டு எப்படி அடிக்கல் நாட்டப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்றுவரை முத்தையா மருத்துவக்கல்லூரி அரசாங்க மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டும் கூட தனியார் கல்லூரிகளில் வாங்கும் கல்விக்கட்டணம் அளவிற்கு வசூல் செய்யப்படும் நிலை உள்ளது. அரசு வழங்கும் உதவித்தொகை கூட மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தேவையான அனைத்து அடிப்படை தேவைகள் உருவாக்கப்படவில்லை.
ஒரு புதிய ஆலை அறிவிப்பு கூட இல்லை
கடலூர் இயற்கை துறைமுகத்தை ரூ.135கோடியில் ஆழ்கடல் துறை மூலமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் என அறிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து துவங்க திட்டமிட வேண்டும். கடலூர், புதுவை, திண்டிவனம் இருப்பு பாதை திட்டம், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க அருவா மூக்கு திட்டம், புறநகர் பேருந்து நிலைய திட்டம், திட்டக்குடி யில் காகிதத் தொழிற்சாலை, பண்ருட்டியில் ஜாம் தொழிற்சாலை,விருத்தாச்சலத்தில் நலிந்த செராமிக் தொழிற்சாலை, சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை, பண்ருட்டியில் பலா முந்திரி ஏற்றுமதி மையம், சென்ட் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அறிவிப்பு கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அனைத்தும் கானல் நீராக மாறியது. வீராணம், பெருமாள் ஏரி, வெலிங்டன், வாலாஜா ஏரி, கெடிலம், பெண்ணையாறு மணிமுத்தாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஏரி, குளம், வாய்க்கால்களை தூர் வாருவதற்கு தடுப்பணை கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திட்டங்களை அறிவிக்கா மல் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் அதிகமான திட்டங் களை நடைமுறைப்படுத்தியதாக முதல்வர் தெரிவித்தார்.
முடிக்கப்படாத ஜெயலலிதா உத்தரவிட்ட பணி
கடந்த 2013 ஆண்டு கொள்ளிடத்தில் உப்புநீர் பரவுவதை தடுக்கவும் தண்ணீரைத் தேக்கி வைக்க கதவணை கட்ட வேண்டுமென சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ரூ.400கோடியில் கதவணை கட்ட 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் உத்தரவிட்டார். அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. புவனகிரிவட்டத்தில் ஆதிவராக நல்லூர் அதிவராக நத்தம் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரியை தூர்வார ரூ.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இன்று வரை அந்த பணி முழுமை பெறவில்லை. கடலூர் அரசினர் விருந்தினர் மாளிகை அதிமுக நிர்வாகிகளை சந்தித்து தமிழக முதல்வர் பேசியுள்ளார். வளர்ச்சித் திட்ட ஆய்வு என்ற பெயரில் கட்சியில் தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் தேர்தலுக்கு முன்னோட்டமாகத் தான் இந்தத் பயணதிட்டங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மாவட்ட மக்களை பொறுத்தவரை ஆய்வுக்கூட்டம் நாடகமாக தான் தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 96 குடிமராமத்து பணிகள் 19.10 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது தற்போது 45 பணிகள் 9.52 கோடி நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணிகள் உழவர் அமைப்புகளின் பெயரில் ஆளுங்கட்சியினர் பெயரளவுக்கு மட்டும் பணி செய்து கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறியுள்ளது இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விருத்தாசலம் மருத்துவமனையில் பிசிஆர் இயந்திரத்தை அமைத்தால் இன்னும் கூடுதலான பரிசோதனை முடிவுகளை விரைவில் கிடைப்பதற்கான ஏற்பாடு செய்ய முடியும். நெல் கரும்பு முந்திரி வாழை பருத்தி உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கரும்புக்கான மானியம் அறிவித்தல் ஏரிகளை தூர்வார என்எல்சி சமூக மேம்பாட்டு நிதியை பெற்று அறிவிக்க வற்புறுத்தல் போன்ற கோரிக்கைகளுக்கு எல்லாம் செவிமடுக்காமல் பார்ப்பதாக கூறி விவசாயிகளின் ஆய்வு கூட்டத்தை முதல்வர் முடித்தார் .