சேலம், பிப்.6- சேலத்தில் போலீசாருடன் மருத்துவர்கள் இணைந்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டம், கருப்பூர் சுங்கச்சாவடியில் மருத்துவர்கள் மற்றும் கருப்பூர் காவல் துறையினர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கும் போது, விபத்து ஏற்பட்டு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.