கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே பைக் டாக்ஸியை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டுக் கமிட்டினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக செயல்படும் பைக் டாக்ஸியை தடை செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டுக் கமிட்டியினர் இன்று கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பைக் டாக்ஸியை தடை வேண்டும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும், போக்குவரத்து ஆணையர் போட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டுக் கமிட்டியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி கூறியதாவது :
தமிழகத்தில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய இரு சக்கர வாகனங்களை, வணிக நோக்கத்தில் பைக் டாக்ஸியாக பயன்டுத்த கூடாது என வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, கடந்த 10 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையாளர் பைக் டாக்ஸியை தடை செய்து உத்தரவிட்டார். ஆனால் அன்றைய தினம் மாலையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒரு பொய்யான தகவலைக் கூறி பைக் டாக்ஸியை தடைச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து வரும் டிச.19 ஆம் தேதி பைக் டாக்ஸி தடை செய்ய வேண்டும், போக்குவரத்து ஆணையாளர் உத்தரவை அமல்படுத்த வேண்டும், அமைச்சர் சிவசங்கர் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.