districts

img

நிலக்குடியேற்ற விவசாயிகளுக்கு பாசன வசதி மறுப்பு: ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, நவ. 8- மொடக்குறிச்சி அருகே நிலக்குடியேற்ற சங்க விவசாயிகளின் நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன வசதி மறுக்கும் அவலம் நீடிக்கிறது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் நிலக்குடியேற்ற சங்கம் மூலம் 131 நபர்களுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு நிலைப்பட்ட நிபந்தனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களான இவர்களுக்கு வழங்கப்பட்ட 377.62 ஏக்கர் நிலங்களுக்கு கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி செய்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. 1987ஆம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து பாசன வசதி செய்து தர ஆணையிட்டார். இந்த ஆணையின்படி ஒரு பகுதி நிலங்களுக்கு பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது.  எஞ்சிய நிலங்களுக்கும் பாசன வசதி செய்து கொடுக்க தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பல காரணங்களைச் சொல்லி காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாசன வசதி செய்து கொடுக்க நிபந்தனைகள் விதிப்பதும், புதிததாக ஆயக்கட்டில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும் இப்பிரச்சனையை நீர்த்து போகச் செய்கின்றனர்.  கடந்த 30 ஆண்டுகளில் கீழ் பவானி பாசன நிலங்கள் பல குடியிருப்புகளாக மாறியுள்ளது. உபரி நீர் அண்டை மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில் பாசன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலங்களுக்கு பாசன வசதி வழங்க தயக்கம் காட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கென நிலக்குடியேற்ற சங்கத்தினை அமைத்து, நிலங்கள் வழங்கி, பாசன வசதி செய்து கொடுக்க ஆணையிட்ட பிறகும், ஒரு பகுதி நிலங்கள் மட்டும் பாசன வசதி பெற்றுள்ளது. நிர்வாக நடவடிக்கையின் காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதி நிலத்திற்குப் பாசன வசதி அளிப்பது நிலுவையில் வைத்திருப்பது அரசின் திட்டத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகும்.  எனவே, வடுகபட்டி கிராமத்தில் ஞானபுரத்தில் வசிக்கும் ஏழை ஆதிதிராவிட விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கே.சொங்கப்பன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.