ஈரோடு, அக்.10- சிதலமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றி, புதிய வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ளது புதுகாலனி. இங்கு சுமார் 50 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டள்ளது. காங்கிரீட் லாப்ட் மற்றும் கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. ஓலைக் கூரையைப் போல கான்கிரீட் கூரையும் மழை காலத்தில் ஒழுகிறது. இவ்வாறு சிதிலமடைந்த வீடுகளில் வேறு வழியில்லாமல் இம்மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, இவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் டி.தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.