districts

img

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்!

தமிழக முதல்வரின் உத்தரவு அடிப்படையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களைக் கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை இன்று, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.  

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 72 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3 மனு மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,59 மனுக்களுக்கு  சுமுகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.  

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.  பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.  

பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

;