districts

img

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடல் நலம் மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான, கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வருகின்றனர். மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமக்கள், மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் அவர்கள் அங்குள்ள 7 மலைகளை ஏறி ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிப்12 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலை ஏற்றத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவின் படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து வெள்ளிங்கிரி மலை ஏறிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர்  சுப்பா ராவ் (57). என்பவர் தனது நண்பருடன் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காக வந்தார். அப்போது 7 ஆவது மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் கீழே இறங்கிய போது 4 ஆவது மலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதே போலச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35). என்பவர் முதலாவது மலை குரங்கு பாலம் அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதே போல இன்று அதிகாலை 4 மணியளவில் வெள்ளியங்கிரி மலை ஏறிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (40) என்பவர் 2 ஆவது மலையான வழுக்க பாறையில் சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை மலை அடிவாரம் கொண்டு வந்து அவசரக் கால மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது,. நேற்று வெள்ளியங்கிரியில் கடும் பனி நிலவியது, உயிரிழந்தவர்களுக்கு இருதய பிரச்சனை மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே உடல் நலப் பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் அடிவாரத்திலேயே அறிவுறுத்தி வரும் நிலையில் அதனை மீறி மலை ஏறிய 3 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.