districts

img

நில மோசடி வழக்கில் முன்னாள் பா.ஜ.க நிர்வாகிகள் இருவர் மற்றும் அனுமன் சேனா நிர்வாகி ஆகிய 3 பேர் கைது!

கோவையில் தரணிதரன் என்பவரைக் கடத்தி அவரது சொத்து பத்திரம், கார் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டதாக முன்னாள் பாஜக நிர்வாகிகள் இருவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்குச் சொந்தமாக தாராபுரம் - பழனி சாலையில் 35 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த பாஜகவைச் முன்னாள் நிர்வாகியான ஹரி பிரசாத் என்பவருக்கு இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பதற்குப் பேசி முடிக்கப்பட்டது.

ஹரி பிரசாத் நிலத்தை வாங்க 8.25 லட்சம் ரூபாய் பணத்தை தரணிதரனிடம் கொடுத்த நிலையில் மீதி பணத்தைக் கொடுக்கவில்லை. மீதிப் பணத்தைக் கொடுக்காமல் நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றி கொடுக்க தரணிதரனை  மிரட்டியதுடன்,  தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவை அழைத்து வந்து ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக தரணிதரன் கோவை பந்தயச்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கூட்டுச் சதி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத், கோவையைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் மற்றும்  ஜான்சன் என்ற இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் கோவையைச் சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்பதும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர்