districts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ

கிருஷ்ணகிரி, பிப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஒரு கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ராஜா (59) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல் அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவியை ஆய்வக உதவியாளர் நடேசன் (59) பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தது. இதையடுத்து 3 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீது பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்த இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.