districts

மா மரத்தில் பூக்கள் உதிர்வை தடுக்க இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்தலாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 8- தமிழ்நாட்டில் மா விளைச்சலில் கிருஷ்ணகிரி மாவட்டம், முதலிடம் வகிக்கிறது. அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரியில் தான் நடத்தப்படுகிறது. ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பேரிகை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா மரங்களை வைத்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மா மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கடந்த சில நாட்களாக காணப்படும் பனிப்பொழிவின் காரணமாக பல பகுதிகளில் பூக்கள் உதிர்ந்தும், கருகியும் வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மருந்து அடிக்க வேண்டும். ஆனால் மருந்து விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே கௌதாலம் கிராம பகுதியில் உள்ள பெண் விவசாயி எழிலரசி, தனது 8 ஏக்கர் நிலத்தில் மலர் சாகுபடி செய்வது மட்டுமின்றி பல்வேறு வகையான பழ மரங்களை நடவு செய்துள்ளார். தற்போது மா மரங்களில் பனிப்பொழிவால் பூக்கள் கருகுவதை தடுக்க, அவரே மருந்து தயாரித்து அடித்துள்ளார். இதனால் மீண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், “மா மரங்களில் பூக்கள் உதிராமல் தடுக்க வெர்மி கம்போஸ்ட் என்ற இயற்கை முறையில் தயாரிக்கப் படும் கலவையை மரங்கள் மீது தெளிக்கிறோம். உதிர்ந்த இலைகள் மீது மாட்டு சாணத்தை தெளித்து அதை மண்ணில் போட்டு மூடி வைத்து 15 நாட்களுக்குப் பிறகு, அதை எடுத்து நன்கு கரைசலாக்கி தெளித்தால் பூச்சி தாக்குவதும், பூக்கள் உதிர்வதும் தடுக்கப்படுகிறது. இந்த இயற்கை மருந்து தெளிப்பதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. இந்த கரைசலை பிற விவசாயிகளும் தயாரித்து பயன்படுத்தலாம்” என்றார்.