districts

நியாய விலை கடை ஊழியர்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப் 8- நியாய விலை கடைகளில் விதி மீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ண கிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் எச்சரித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் எல்லையில் இந்த மாவட்டம் அமைந்துள்ள தால், இங்கிருந்து ரேசன் அரிசி கடத்துவது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்க சிறப்பு பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு வடிவில், நூதன முறைகளில் ரேசன் அரிசி கடத்தல் நடப்பதாகவும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. கடத்தலில் ஈடுபடுபவர்கள் ரேசன் கடைகளில் இருந்தே அரிசியை வாங்கி செல்கின்றனர். இது தொடர்பான புகாரை தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், காட்டிநாயனப் பள்ளி, ஓசூர் அடுத்த சென்னத்தூர் உள்ளிட்ட கடைகளின் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடும் ரேசன் கடை விற்பனையாளர்கள், அதிகாரிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.