districts

img

சோக்காடி கிராமத்தில் தொடரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்

கிருஷ்ணகிரி, அக்.31- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை அருகில் உள்ளது சோக்காடி கிராமம். இங்கு 150 பட்டியல் இன குடும்பங்கள்  மாற்று சமூகத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு சோக்காடி கிராமத்தில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது  தொடர்கதையாகி வருகிறது. 1987 இல் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்த தலித் இளைஞர் மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்டார். அப்போது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 8 ஆண்டுகள் வழக்கு நடந்தது. தாக்கியவர்கள் பாதிக்கப்படுவார்கள்  என்ற பயத்தில் அப்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலையில் சமாதான பேச்சு நடைபெற்றதையடுத்து பிசிஆர் வழக்கு திரும்ப பெறப்பட்டது. அதன்பிறகு, 1995 இல் பொங்கல் பண்டிகையை யொட்டி நடந்த கோவில் விழாவில் தலித் மக்களை மாற்று சமூகத்தினர் அவமதித்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் பாதிக்கப்பட்டனர். அப்போது வட்டாட்சியர் தலையிட்டு அமைதி ஏற்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2020 இல் இந்த தாக்குதல்கள் குறித்து அரசு தரப்பு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தலித் பகுதி இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் தகராறில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் அன்று அம்பேத்கர் பேனர்கள்  கிழித்தெறியப்பட்டது. இதுகுறித்து கேள்வி கேட்டதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கெடிலா ராமலிங்கம் தலைமையில் மாற்று சமூகத்தினர் தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதில்  30 க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டனர். இது குறித்தும் அம்மக்கள் தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 2023 துவக்கத்தில் தலித் இளைஞர் ஒருவர் பிற சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது பெண் தகுதியான வயது அடைய வில்லை என்பதால் இருவரையும் பிரித்து வைத்தனர். தலித் மக்களுக்கு எதிரான சமூகப் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக இருந்த நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு தலித் குடியிருப்பு பகுதியொட்டி பிற சமூகத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.சி.ராஜன் தலைமையில் கோவில் கட்டும் பணியை துவக்கினர்.

கோவில் பணிகளின் போது கற்கள் செதுக்குதல், வடிவமைத்தல் வேலைகள் காரணமாக தலித் மக்கள் வீடுகளுக்குள் தூசி பறந்து வந்தது. உணவிலும் நீரிலும் வீடுகள் முழுவதும் தூசிகள் படிந்தன. இதனால், வேலை நடக்கும் பகுதியை சுற்றி துணிவலை அமைக்க வேண்டும் என்று வேலை செய்யும் பணியாளர்களிடம் அருகில் உள்ள தலித் குடியிருப்பு வாசிகள் கூறினர்.

இந்நிலையில், இம்மாதம் 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அன்பரசன் உட்பட சில தலித் இளைஞர்களை அதிமுக பிரமுகரும் கோவில் கட்டும் நிர்வாகியுமான எஸ்.சி.ராஜன் தாக்க முற்பட்ட போது கால் இடறி கீழே விழுந்தார். இது குறித்து இரு தரப்பினரும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் சோக்காடி கிராமத்திற்கு வந்தனர். இந்நிலையில், எஸ்.சி.ராஜனின் தம்பி சதாசிவம் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர்  தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பு  பகுதிக்குள் புகுந்து வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்தனர். மேலும் ஒரு குடிசைக்கு தீ வைத்தனர்.
இந்த தாக்குதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சதீஷ், சிலம்பரசன், ஆறுமுகம், கவிதா, கலையரசன் ஆகியோர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக் குழு உறுப்பினருமான பி.டில்லி பாபு தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சிங்காரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் சி.பி. ஜெயராமன், மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், அண்ணாமலை, கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் ராஜா,போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா,வழக்கறிஞர்கள் நவீன், முரளி உள்ளிட்டோர் சோக்காடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு, பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் சேதமடைந்த குடிசைகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிறகு, செய்தியாளர்களை சந்தித்த டில்லிபாபு,“ இந்த கிராமத்தில் தலித் மக்கள் பிற சமூகத்தினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார். கடந்த 29ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இம்மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட காவல்துறை நேர்மையான விசாரணை நடத்தி பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தினார்.

ஒருபுறம் சாதி ஆதிக்க சக்திகளுக்கு ராஜ விசுவாசம் காட்டும் காவல்துறையினர் மறுபுறம் விடியற்காலையில் 2 மணிக்கு மேல்  சோக்காடி சென்று தலித் மக்கள் பகுதியில் வீடு வீடாக புகுந்து ஊர் பெரியவர் முனிராஜ், சத்தியமூர்த்தி, குமரன், செல்வம், வரதராஜ், ராஜூ ஆகிய ஆறு பேரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் டில்லிபாபு கூறினார்.

ஆட்சியருடன் சந்திப்பு

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் டில்லி பாபு தலைமையில் பிரகாஷ், ராஜா, லெனின் முருகன், இளவரசன்,நவீன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கிருஷ்ணகிரி சென்றனர். ஆட்சியர் இல்லாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டனர்.