districts

img

அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கிருஷ்ணகிரியில் ஜூலை 5 துவங்குகிறது

கிருஷ்ணகிரி, ஜூன்15 - 30 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி  கிருஷ்ணகிரியில் ஜூலை 5 ஆம்தேதி துவங்க  உள்ளது. இதனை காண சுமார் 50 ஆயிரம்  பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்டு தோறும் அகில இந்திய மாங்கனி  கண்காட்சி கிருஷ்ணகிரியில் நடத்தப்படுவது  வழக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்  40 ஆயிரம் டன் மா சாகுபடி செய்யப்படுகிறது.  பீந்தர், மல்கோவா பெங்களூரா உள்ளிட்ட சுவை மிக்க மாங்கனிகள் கிருஷ்ணகிரியில் மாநிலத்திலேயே மிக அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால் பிற மாநிலங்களுக்கும், ஜப்பான், அமெரிக்கா,குவைத்,சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. கிருஷ்ணகிரியில் 30 மாங்கூழ் தொழிற்சாலை கள் மூலம் 62 நாடுகளுக்கு இங்கிருந்து மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உற்பத்தியில் 10 விழுக்காடு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும், 15 விழுக்காடு ஐரோப்பா நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 30 வது அகில  இந்திய மாங்கனி கண்காட்சி இங்கு துவங்க உள்ளதால் கிருஷ்ணகிரி மற்றும் பிற  மாவட்டங்கள், அண்டை மாநிலத்தில் இருந்து ரத்னா, மல்லிகா, பெங்களூரா, சிந்து, அல்போன்சா, காதர், மல்கோவா என 40 க்கும் அதிகமான வகை மாங்கனிகள்  இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளது. 25  நாட்கள் நடைபெற உள்ள இக் கண்காட்சி யில், கலை நிகழ்ச்சிகள்,பொழுதுபோக்கு அம்சங்கள் வழக்கம் போல் ஏற்பாடு செய்யப் பட உள்ளது என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.