districts

img

உளுந்தூர்பேட்டையில் விரைவு ரயில்களை நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் நிலைய முற்றுகை போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தின் வழியாக செல்லக்கூடிய அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வெள்ளியன்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் இருந்தும் அவ்வழியாக செல்லக்கூடிய விரைவு ரயில்கள் எதுவும் இங்கே நின்று செல்வதில்லை. விழுப்புரத்தை அடுத்து விருத்தாச்சலத்தில் ரயில்கள் நிற்பதால் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்வதற்கு மற்றும் வியாபார நிமித்தமாக செல்லக்கூடிய வியாபாரிகளும் விழுப்புரம் அல்லது விருத்தாசலம் சென்று பயணிக்கும் நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

வரலாற்றில்  மகாத்மா காந்தி இந்த ரயில் நிலையத்தில் இறங்கி பொதுமக்களிடையே விடுதலைப் போராட்டம் குறித்து உரையாற்றிய பாரம்பரியமிக்க இந்த இடத்தை கடந்து இரவில் 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் பகலில் இருபதுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் சென்று வந்தாலும் ஒரு ரயில் கூட இங்கு நின்று செல்லாததால் இப்பகுதி மக்களுக்கு ரயில் வசதி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்கராஜன் நேரில் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்து, இங்கு விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், உளுந்தூர்பேட்டை நகர் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ரயில்கள் நிற்க வேண்டும் என மனுக்கள் அனுப்பியும் இதுவரை ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஐந்து கமிட்டிகள் ஒருங்கிணைந்து உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று இப்பகுதி மக்களை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என வலியுறுத்தி ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் இருந்து புறப்பட்ட முற்றுகை ஊர்வலத்திற்கு திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருநாவலூர் மேற்கு, உளுந்தூர்பேட்டை நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முறையே டி.எஸ்.மோகன், பி.சேகர், ஆர்.சீனிவாசன், வி.ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், எம்‌.செந்தில், வி.சாமிநாதன், இ.அலமேலு, வி.ஏழுமலை, எம்.கே.பழனி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், கே.அய்யனார், ஏ.தேவி, மு.சிவக்குமார், வி.சின்னராசு, கே.வீரமணி ஆகியோர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கு 20 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.