districts

img

கள்ளக்குறிச்சி நகரமன்ற கூட்டத்தில் ரூ. 5.97 கோடி நிதி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி, மே.24- கள்ளக்குறிச்சியில் நகரமன்ற அவசர ஆலோசனை கூட்டம், நகரமன்றத் தலைவர் சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஷமீம் பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 21 வார்டுகள் 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு புதிதாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மண்டலம் ஏ பிரிவுக்கு சதுரஅடிக்கு 75 பைசாவும், பி பிரிவுக்கு 50 பைசாவும், சி பிரிவுக்கு 30 பைசாவும் உயர்த்தப்பட்டது.  1 முதல் 21 வார்டுகளில் சாலை வசதி, மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ. 3 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. தோட்டக் கழிவுகளை அரைக்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் பண்டல் செய்யும் இயந்திரங்கள், கண்ணாடி அறைக்கும் இயந்திரம், நெகிழி டப்பாக்களை அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.2 கோடியே 29 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 5 கோடியே 97 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி பொறியாளர் பாரதி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.