கள்ளக்குறிச்சி, மார்ச் 7- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும், அந்த வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், இனிவரும் காலங்களில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், செந்தில்குமார் எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சாந்தி, வேளாண் துணை இயக்குநர் விஜயராகவன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், இணை இயக்குநர் வேளாண் (திட்டம்) சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.