districts

img

பட்டியலினத்தவர் கோயிலில் வழிபட அனுமதி மறுப்பு-2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பட்டியலினத்தவரை கோயிலில் வழிபட அனுமதி மறுத்த 2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. ஊருக்கு பொதுவான இடத்தில் இருக்கும் இந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் அதே ஊரில் வசிக்கும் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த  பி.சக்திவேல் காளியம்மன்  கோவிலுக்குள் வழிபட புதன்கிழமை காலை 7 மணியளவில் சென்றபோது,   வீரணம்பட்டியை சேர்ந்த  சாதி ஆதிக்க சமூகத்தை சேர்ந்த  துரைசாமி மகன்கள் மாணிக்கம், பிரகாஷ் ஆகியோர் சக்திவேலை தடுத்து நிறுத்தியதுடன், சட்டையை பிடித்து இழுத்து கோவிலுக்கு வெளியே தள்ளியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தாக்குதலுக்கு உள்ளான ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த இளைஞரை கோவிலுக்குள் அழைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் ஜாதி ஆதிக்க சக்திகள் வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு  சுமார் 4 மணி நேரம் கோவில் அருகே அவரை சிறை பிடித்தும், வாகனத்தை மறித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாதி ஆதிக்க சமூகத்தினரிடம், சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தியும் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் மக்களை  அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை, பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார். அப்போதும் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.  இதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி கோவிலுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் கோட்டாட்சியரை மீட்டு பாதுகாப்பாக அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் ஆய்வு 

சாதி ஆதிக்க சக்திகளால் பாதிப்புக்கு உள்ளான ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த இளைஞரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு தலைமையில், மாநில குழு உறுப்பினர் எஸ். பாலா வீரணம்பட்டிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தனர்.

இந்த தீண்டாமை வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாக கண்டிப்பதுடன், கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த  சாதி ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாணிக்கம், பிரகாஷ் ஆகிய இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே, அவர்களை உடனடியாக கைது செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சீல் வைக்கபட்டுள்ள  கோயிலை உடனடியாக திறந்து ஆதிதிராவிட மக்களை மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிப்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இப்பகுதியில் மேலும் சாதிய மோதல்கள் ஏற்படாமல், அப்பகுதியில் நிரந்தரமான அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பால தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கடவூர் வட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி உடனிருந்தார்.