கரூர், மார்ச் 22- தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பு செய்யும் அரசாணை எண் 139 ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வீ.குமரவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.