கரூர், டிச.16 - 17 ஆவது தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் டிசம்பர் 13 இல் நிறைவு பெற்றது. இப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா மாணவி சுஷ்மிதா முருகேஷ் தமிழக அணியின் சார்பாக பங்கேற்று தனி இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும், தமிழக அணியின் குழுப் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் என இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். லக்னோவில் நடந்த பாராட்டு விழாவில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி சாதனை மாணவி சுஷ்மிதா முருகேஷ்க்கு, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா வெற்றிக் கோப்பையை வழங்கி, பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார். பள்ளியில் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் எம்.சுபாஷினி ஆகியோர் தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் சுஷ்மிதா முருகேஷ் மற்றும் அவருக்கு டென்னிஸ் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் மோகன், வினோத்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பரணி பார்க் முதல்வர் கே.சேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.