கரூர், ஜூன் 4 - கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 54 வேட்பாளர்கள் (தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கை) போட்டியிட்டனர். 1,670 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவிற்காக 8 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகளும், 2,167 வாக்குகளை சரிபார்க்கும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.
கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் 80.91 சதவீத வாக்குப்பதிவும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில் 82.66 சதவீதமும், அரவக்குறிச்சி தொகுதியில் 253 வாக்குச் சாவடிகளில் 78.84 சதவீதமும், மணப்பாறை தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளில் 75.97 சதவீதமும், விராலிமலை தொகுதியில் 255 வாக்குச் சாவடிகளில் 80.49 சதவீதமும், வேடசந்தூர் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 74.43 சதவீதமும் என மொத்தம் 1,670 வாக்குச்சாவடிகளில் 78.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குகளை சரிபார்க்கும் கருவிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான கரூர்-சேலம் சாலையில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் மூலம் வாக்களித்த 7,708 வாக்குகள் 8 மேஜைகளில் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும், ஒவ்வொரு மேஜைக்கும் தலா 500 தபால் வாக்குகள் வழங்கப்பட்டு இரண்டு சுற்றுக்களாக எண்ணப்பட்டன.
கரூர் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், மணப்பாறை தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், விராலிமலை தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், வேடசந்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.
இதில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும், ஒவ்வொரு சுற்றுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் ஜோதிமணி 24,322 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 21,987 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
மேலும் ஒவ்வொரு சுற்றிலும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மூன்றாமிடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா நான்காமிடத்தையும் பிடித்தனர். மாலை 5 மணி வரை நடைபெற்ற 15 ஆவது சுற்று வரை, காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை விட 1,19,938 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
இதில் 18 ஆவது சுற்றின்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,53,098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் 3,31,033 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 22 காவல் ஆய்வாளர்கள், 24 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட 804 பேர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முகவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு
பெண் முகவர் காயம்
முன்னதாக கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 54 வேட்பாளர்களுக்கு, ஒரு வேட்பாளருக்கு 100 முகவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் 3000-க்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையமான எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி முன்பு குவிந்தனர்.
இதனால் குறிக்கப்பட்ட நேரத்திற்குள் (காலை 8 மணிக்கு) வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினர் பரிசோதனை செய்து அனுப்பும் சிறிய நுழைவாயிலில் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் முகவர் கீழே விழுந்ததில் கையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.
இதையறிந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி முகவர்களை வரிசையாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் 4 இயந்திரங்கள் பழுது
வாக்காளர் ஒப்புகைச் சீட்டு மூலம் வாக்கு எண்ணிக்கை
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை 4 இயந்திரங்களில் பேட்டரிகள் பழுதானதால், வாக்காளர் ஒப்பு கைச் சீட்டு மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டப் பேரவை தொகுதியில் முதல் சுற்றில் ஒரு இயந்திரமும், 13 ஆவது சுற்றில் ஒரு இயந்திரமும் பழுதானது. இதனால் அந்த இரு இயந்தி ரங்களை எண்ணுவது தள்ளி வைக்கப்பட்டது.
இதேபோல பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு இயந்திரத்தில் பேட்டரி குறைந்து விட்டதால் பழுது ஏற்பட்டது. மற்ற பேட்டரி கள் பொருத்தியும் அந்த இயந்திரங்களை இயக்க முடிய வில்லை. இதனால் அந்த இயந்திரங்களை கடைசியாக எண்ண முடிவு செய்யப்பட்டது.
பிற்பகலுக்கு பிறகு பழுதான நான்கு இயந்திரங்களுக்கு பதில், அந்த இயந்திரங்களோடு உள்ள, வாக்காளர் ஒப்புகைச் சீட்டை எண்ணி அதன் முடிவுகளை அறிவித்தனர்.
544 தபால் வாக்குகள் செல்லாதவை
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 544 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தபால் வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், மொத்தம் 6,454 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. முதலில் செவ்வாய்க்கிழமை காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை பிற்பகல் முடிவடைந்தது.
இதில், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு 3,423 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகானந்தத்துக்கு 1,026, நாம் தமிழர் கட்சி ஹிமாயூன்கபீருக்கு 610, தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு 490 வாக்குகள் என சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 5,910 வாக்குகள் பதிவானது. இதில் 544 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.