கரூர், மே 6 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், ஈச்சம்பட்டியில் பட்டியலினத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதே பகுதியில் மற்ற சமூகத்தினரின் திருவிழா ஏப். 28 அன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் செல்லும்போது, அந்த மக்கள் சாலையோரத்தில் நின்று பூத்தட்டு ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாதி ஆதிக்க நபர்கள் பட்டியலின மக்களின் மீது பட்டாசை கொளுத்திப் போட்டுள்ளனர். இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இதை எதிர்த்து கேள்வி கேட்ட, பட்டியலின மக்களின் குடியிருப்புக்குள், சாதி ஆதிக்க வெறியர்கள் புகுந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், பட்டியலின மக்கள் குடியிருப்பைச் சுற்றி முள் வேலி அமைத்து, சாதி ஆதிக்க சக்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்கும் காட்டுப் பகுதிகளுக்கு செல்ல விடாமல் துரத்தி வருகின்றனர். விளை நிலங்களில் பட்டியலின மக்கள் வேலைக்கு வரக் கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். பட்டியலின மக்கள் கந்து வட்டிக்கு வாங்கியுள்ள கடன்களை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி தாகத வார்த்தைகளால் மிரட்டி வருகின்றனர்.
பட்டியலின மக்கள் மீதான, இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டக் கோரியும், மேற்கண்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஐயப்பனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், ஈச்சம்பட்டியில் அமைதி திரும்பிட குளித்தலை காவல்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடுமையான தாக்குதல்களுக்கு ஆளான பட்டியலின மக்கள் மீதும், பட்டதாரி இளைஞர்கள் 4 பேர் மீதும் காவல்துறை பதிவு செய்துள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் குளித்தலை சுங்ககேட்டில் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் தலைமையில் குளித்தலை டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு, விளக்க கூட்டமாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அறம் மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் செயலாளர் வீரகோபி முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர். அறம் மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் தர்மலிங்கம், சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் சரவணன், அறம் மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் துணைச் செயலாளர் செந்தில் முருகன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.