குழித்துறையில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மீது காங்கிரஸ் பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குழித்துறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டியிடும் அனைத்து வார்டுகளிலும் வெற்றி அடையும் நிலை ஏற்பட்டதால் விரக்தியடைந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் வாக்குச்சாவடிகளில் அராஜகம் செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஜூலியட் மெர்லின் ரூத் போட்டியிடும் 12வது வார்டுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லிஜி பாய் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது போல் மறைமுகமாக பணம் கொடுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அங்கிருந்த காவலர்களிடம் புகார் செய்துள்ளனர்.
அப்போது, காவல்துறையினர் உங்கள் எல்லை 100 மீட்டரை கடந்து நில்லுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூட் மற்றும் 11வது வார்டு வேட்பாளர் ருக்மணி அம்மாள் ஆகிய இருவரையும் வெளியேற்றியுள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் லிஜி பாய் மட்டும் வாக்குச்சாவடிக்கு அருகில் இருந்துள்ளார். பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வேட்பாளரின் கணவர் சம்பத்தை காங்கிரஸ் தலைவர் சுரேஷ் உடன் வந்த தங்கப்பன் என்பவர் அவருடைய மொபைல் போனை கையிலிருந்து பிடுங்கி தரையில் போட்டு உடைத்துள்ளார்.
மேலும், வேட்பாளைரையும் அவரது கணவரையும் சரமாரி தாக்க தொடங்கியதில் சம்பத் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வாக்குப்பதிவு தினமான பிப்ரவரி 19ம் தேதி இரவு 11 மணி அளவில் மார்த்தாண்டம் வாலிபர் சங்க வட்டார தலைவர் ஜீனோ ஜினைட் வீட்டிற்கு வந்த காங்கிரஸ் வட்டார தலைவர் சுரேஷ் தலைமையிலான கூலிப்படையினர் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த 5 லட்சம் மதிப்பிலான காரினை அடித்து நொறுக்கியது உடன் வீட்டின் ஜன்னல் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த அவருடைய வயதான பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதைக் கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் , வட்டார குழு செயலாளர் மோகன் குமார் , மாவட்டகுழு உறுப்பினர் ஆனந்த சேகர் , வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரதீஷ், மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட வீட்டினை பார்வையிட்டு அவருடைய பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தக்கலை டிஎஸ்பி, மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் வட்டார குழு செயலாளர் மோகன் குமார் கூறியதாவது, தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் இத்தகைய அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆனாலும், இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.