கடலூர், நவ. 30- தமிழகத்தில் சமீபகாலமாக சாலை அமைக்கும் பணியின் போது சாலை ஓரத்தில் உள்ள வாகனங்கள், கை பம்புகள் இரும்பு காங்கிரீட் தகவுகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒரு சில ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் பகுதியில் கால்வாய் அமைத்த போது அங்கிருந்த இரும்பு கேட்டை திறக்க முடியாமல் சிமெண்ட் கலவை கொட்டப்பட்டது. அதேபோல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இருந்த இரும்பு கேட் இருந்த பகுதியிலும் சிமெண்ட் கலவை கொட்டப்பட்டது. அதிகாரிகள் எச்சரித்த பிறகு அவசர அவசரமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது கடலூர் அடுத்த கோண்டூர் ஊராட்சியில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாயை அகற்றாமல் அப்படியே கால்வாய் அமைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கால்வாய்க்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாயை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.