கடலூர், ஜூன் 7- பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க கோரி இசை ஆசிரியர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த னர்.
கடலூர் மாவட்டத்தில் 40க்கு மேற்பட்டோர் இசை ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். 2005 -2006 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது பதிவு மூப்பு அடிப்படையில் இசை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்பிறகு, பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கப்பட வில்லை. மேலும் பகுதி நேர ஆசிரியர் பணியிலும் பணி வழங்கப்படவில்லை.
எனவே, பதிவு மூப்பு இருந்தும் அதற்கான கல்வி தகுதி இருந்தும் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 45 வயதை கடந்து விட்டதால், முதலமைச்சர் தலையிட்டு, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.