districts

img

தென்பெண்ணையில் வெள்ளம்; தத்தளிக்கிறது கடலூர்

கடலூர், டிச.2-  தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 

பெஞ்சால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த பாதிப்புகளில் இருந்து வெளி வருவதற்குள் ஆற்றின் வெள்ளப்பெருக்கு மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டம் வழியாக வரும் தென்பெண்ணை ஆறு, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் வழியாகச் சென்று தாழமகுடா கிராமத்தின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் செய்வது அறியாது அவசர அவசரமாக வீடுகளில் இருந்த பொருட்களை மொட்டை மாடிகளிலும், மாடி வீடுகளிலும் எடுத்துச் சென்று வைத்தனர். அதற்குள்ளாக வீடுகளுக்குள் வேகமாக தண்ணீர் புகுந்தது. இதனால் பாதி பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதம்டைந்தது. 

மேலும், வீட்டில் இருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மேடு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று நிறுத்தினர். நேரம் செல்லச் செல்ல தண்ணீர் வேகமாக வந்து பல்வேறு பகுதிகளில் காலை விடிவதற்குள் தரைத்தளம் முழுவதும் மூழ்கி, முதல் தளத்தில் தண்ணீர் சென்றது.

தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளிலும் தெரியாத அளவிற்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடி வங்கக்கடலில் கலக்கிறது. குண்டு சாலை, செம்மண்டலம், வெளி செம்மண்டலம், சாவடி, ஆல் பேட்டை, குமரப்பன் நகர், நடேசன் நகர், குறிஞ்சி நகர், குண்டு உப்பலவாடி, கங்கனாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நகர்கள், கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் புகுந்து வீடுகளை மூழ்கடித்துள்ளது.

அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதிகள், பண்ருட்டி பகுதியில் உள்ள கண்டரகோட்டை, அக்கட வள்ளி, ஒறையூர், பட்டாம்பாக்கம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கடலூர் ஒன்றியத்தில் உள்ள பாபு குளம், கே.டி.பாளையம், இரண்டாம் வளாகம், தனலட்சுமி நகர், இந்திரா நகர், கே.டி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையும், கஷ்டம்ஸ் சாலையும் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பெரிய கங்கணாங்குப்பம் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி,  தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுத்தனர். 

அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வீடியோ காலில் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாகத் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

பெஞ்சால் புயல் எதிரொலியாக கனமழை பெய்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அறிவித்த நிலையில் அதிகப்படியான தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வரும் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வில்லை. முன்கூட்டியே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால் உடைமைகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளியேறி இருப்பார்கள். நகர்களுக்குள் முழுமையாக தண்ணீர் சென்ற பிறகுதான் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்கள் பாதுகாப்பாக செல்லுங்கள் என்று எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

தூக்கத்தை தொலைத்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் தண்ணீர் நகர்களுக்கு வர ஆரம்பித்தது, இதனை அடுத்து ஏற்கனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட அனுபவத்தில் இருந்த மக்கள் தங்களுடைய உடமைகளை தூங்காமல் விடிய விடிய பாதுகாத்து  வந்தனர். மேலும், விடிவதற்குள் முழுமையாக தண்ணீர் ஏறி விட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்து நின்றனர்.

பாடம் கற்கவில்லை

கடந்த 2015 ஆம் ஆண்டு அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அடுத்து 2021 ஆம் ஆண்டு கடும் பாதிப்பை சந்தித்தது. அப்போது விட தற்போது மேலும் அதிகமாக தண்ணீர் வந்து பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று தெரிய வருகிறது. வெள்ள தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தென்பெண்ணை ஆற்றின் கரைகளை உயர்த்தி கட்டாததாலும், ஆங்காங்கே ஆறுகளில் உடைப்பு இருந்ததாலும், விரைவாக தண்ணீர் நகர்களுக்குள் புகுந்து விட்டது. 

கடந்த வெள்ளத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த இடத்தில் மட்டும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால் நகரங்களுக்குள் வெள்ள நீர் புகும் இடத்தில் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு வெள்ளங்களில் இருந்தும் பாடம் கற்காததால் மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பை மக்கள் எதிர்கொண்டு உள்ளனர்.

குடியிருப்போர் சங்கம் எச்சரிக்கை 

புயல் உருவாகும் முன்பே, கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக ஆற்றில் வெள்ளம் வந்தால் நகர்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் புகைப்படத்தோடு இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு வெள்ளக்காடாக கடலூர் மிதந்து வருகிறது.

‘மின்சாரம் இன்றி தவிப்பு 

பெஞ்சால் புயலுக்காக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 30 மாலையே மின்சாரம் நிறுத்தப்பட்டது.

சூறைக்காற்று காரணமாக ஆங்காங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததன் விளைவாக மூன்றாவது நாளாக திங்கள் கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மின்சாரம் இல்லாததால் மின் மோட்டார் இயக்கப்பட முடியவில்லை. இதனால் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில் உள்ளனர். மேலும் தங்களுடைய கைபேசிக்கு சார்ஜ் போடுவதற்கு கூட முடியாமல் உள்ளனர். பல்வேறு இடங்களில் தொலைபேசியில் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை.

கடலூர்-புதுவை போக்குவரத்து துண்டிப்பு: 

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டதில், வெள்ள நீர் பெரிய கங்கணக்கு பகுதியில், கடலூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நான்கடி அளவிற்கு செல்வதால், கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள், டிராக்டர் மற்றும் கயிறு மூலமும் மீட்கப்பட்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர் கரன் தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் பெரிய கங்கடங்குபத்தில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு பணி துறையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.