சிதம்பரம், ஜன. 27- சிதம்பரம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த கே.ஆர்.செந்தில்குமார் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்துக்குமரன் துணைத்தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில் 74ஆவது குடியரசு தின விழா அழைப்பிதழில் முத்துக்குமரன் பெயர் இல்லாததால் அவரும், சிபிஎம் நகர்மன்ற உறுப்பினரும் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதுகுறித்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூறுகையில், கடந்த சுதந்திர தின விழா அழைப்பிதழில் நகர்மன்றத் துணைத் தலைவர் பெயர் இடம்பெற்றது. ஆனால் குடியரசு தின விழாவில் இடம்பெறவில்லை. இது நகர்மன்றத் தலைவருக்கு தெரிந்து செய்கிறார்களா? அல்லது அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி சார்பில் நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களிலும் துணைத்தலைவர் பெயரை பதிவு செய்வதில் நகராட்சி ஆணையர் அலட்சியம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.