கடலூர்,ஜன.4- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடை செய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷக் கள்ளை குடித்த பால சுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி மயங்கினர். அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.