districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டா வழங்கக்கோரி மனு - 18 பேருக்கு பட்டா  

உளுந்தூர்பேட்டையில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வரும் 18 குடும்பத்தினருக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து  பட்டாக்கள் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை - ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டாத்தூர் கிராமத்தில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வரும் 18 குடும்பத்தினருக்கு அவர்கள் குடியிருக்கும் இடத்தை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட இ.அலமேலுவிடம் அப்போதே இப்படி குடியிருக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின் நிறைவேற்றி தருவதாக கட்சியினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக இ.அலமேலு தேர்வானபின் மாவட்ட ஆட்சியர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டாக்கள் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான இ.அலமேலு, ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் மற்றும் உரிய துறை அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர்.  

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு பயனாளிகள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

;