அரியலூர், நவ.4 - பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்கள் சென்றுவர கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்திட வேண்டும் என கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பாக அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை மாணவர் சங்க மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில தலைவர் அரவிந்த்சாமி, மாநில துணை செயலாளர் மோகன், அரியலூர் மாவட்ட செயலாளர் குணா ஆகியோர் வழங்கினர். அந்த மனுவில், “தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி வேலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென காலை, மாலை வேளைகளில் தனி சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களுக்கான பேருந்து நிறுத்தத்தில் கட்டாயம் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். கல்வி வளாகத்தின் அருகே பேருந்து நிறுத்தம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்வியாண்டிற்கான பேருந்து பயண அட்டையை உடனே வழங்க வேண்டும். பேருந்து பயண அட்டையை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் வழங்க வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு பயண அட்டைக்கான தொலைவை 40 கி.மீ வரை வழங்க வேண்டும். ஆய்வு மாணவர்களுக்கென கூடுதல் வழித்தடங்களில் பயண அட்டை செல்லத்தக்க வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள பேருந்துகளை சரி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.