அரியலூர், பிப். 7 - வியாபாரிகள் விலைக்கு வாங்கிய நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிச் செல்லும்போது ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருச்சிராப்பள்ளி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நெல் கொள்முதல் முகவர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் 5.2.2022 அன்று திருச்சியில் உள்ள நாகப்பன் நகர் கக்கன் காலனியில் அமைந்துள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக தரக் கட்டுப்பாட்டாளர் ராஜமூர்த்தி பங்கேற்று கூறியதாவது: “அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் வெளி மாவட்டங்களில் விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதாக புகார்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.
இதை தடுப்பதற்காக காவல்துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாகன தணிக்கை கிடங்குகளில் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடத்தும்போது அரவைக்காக வியாபாரிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் சில இடங்களில் நடந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரி ஓட்டுநர்கள் இனிமேல் முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் செய்வதில் சில வியாபாரிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் சில விதிமுறைகளை நிர்ணயம் செய்துள்ளனர். நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைப்பது சம்பந்தமாகவும், உரிமம் பெற்றவர்களுக்கு வியாபாரம் செய்வது சம்பந்தமாகவும் நெல்லை வாகனங்களில் கொண்டு வரும்போது அரசு உத்தரவுப்படி வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தணிக்கை செய்யும் பொழுது கீழ்கண்ட ஆவணங்களை ஓட்டுநர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் நெல் மூட்டைகளுக்கு உரிய ரசீதை ஓட்டுநர்கள் வைத்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் நெல்லை கொண்டு வரும் ஓட்டுநர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வருவதில்லை. இதனால் நெல்லை பறிமுதல் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்க்க விண்ணப்ப படிவம் ஓட்டுநர்களிடம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி வியாபாரிகளிடமும் இந்த படிவம் வழங்கப்படும். அதில் நெல்லை விற்பனை செய்த விவசாயியின் பெயர், அரிசி ஆலை, உரிமையாளர் பெயர், வியாபாரிகள் பெயர், முகவரி, ஜிஎஸ்டி எண், லாரியின் பதிவு எண், எந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உறுதிசெய்து ஓட்டுநர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த படிவங்களுடன் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நெல் மூட்டைகளை கொண்டு செல்லலாம். அப்படி படிவங்களின்றி கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும். இதை வியாபாரிகளும் ஓட்டுநர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.